Wednesday, May 14, 2014

ஊரின் பெரும் புள்ளி


தொட்டிக்குள் முழுகி இருந்த மாடு திடீரென எழுந்தது . 
இதற்கு மேல் தண்ணீர் குடிக்க முடியாது என்று அது உணர்ந்ததை காடன் தெரிந்து கொண்டான் . 
பொதுவாக வேற எந்த மாட்டிற்கும் அவன்
 அவ்வளவு நேரம் கொடுப்பதில்லை . 
கிசோ அவனுக்கு தெய்வம் . 
நாள் ஒன்றுக்கு 5லிட்டர் வரை பால் கறந்து கொடுத்து அவனை காப்பாற்றுவதால் கிசோவை மட்டும் தொட்டியில் முழுகி தவிடு திண்ண அனுமதிப்பான் .
 நாக்கை வெளியே நீட்டி சரிந்த வாய்பகுதியில் ஒட்டியிருக்கும் தவிடு துகள்களை நக்கியபடியே
 கிசோ தொட்டியை விட்டு நகர்ந்து செல்லும் .
 வாசலில் வைத்திருந்த தண்ணீர் டப்பாவை எடுத்துக்கொண்டு ,பட்டியில் கிடந்த குச்சியையும்,வெற்றிலை டப்பவையும் எடுத்துக்கொண்டு
 மாடுகளை ஓட்டிக்கொண்டு காடன் புறப்பட்டான் . 
பொதுவாக பொன்பரப்பி பஸ் வடக்கே செல்லும் போது புறப்படுவான் ,
சாய்ங்காலாம் அந்த பஸ் திரும்பும் போது ஓட்டிக்கிட்டு வந்துடுவான் . 
இன்று கொஞ்சம் நேரத்திலேயே புறபட்டான். அடுப்பில் வெந்து கொண்டிருந்த நாட்டுக்கோழியே அதற்கு காரணம் . காடனுக்கு நாட்டுக்கோழி என்றால் நாவில் எச்சில் அதிகமாகவே ஊரும் . 
வடித்த சோற்றில் கோழித்துண்டுகளை புரட்டி சுவைப்பதுதான் அவனுக்கு இந்த உலகத்தின் உயர்ந்த உணவு . 
அதற்காகவே மாடுகளை வேகமாக ஓட்டினான் . 
தொட்டியில் சரியாக தண்ணீர் குடிக்காத மாடுகள் சாலையில் குடிநீர் குழாய்களில் தேங்கி இருக்கும்
 தண்ணீரை குடித்துக்கொண்டிருக்கும் ,அது காடனுக்கு வெறுப்பை தருவதால் அப்படி குடிக்கும் மாடுகளை பின் தொடையில் வீங்கும் அளவிற்கு அடிப்பான் . 
சாலை முழுவதும் ஊர் மக்கள் எதையாவது வெயிலில் உலற்றிக்கொண்டு இருபார்கள் .
 இவன் மாடுகள் அனைத்தும் அல்ப்பங்கள் கிசோவை தவிர . 
அனைத்தும் வெயிலில் காய்பவற்றை திண்ண ஓடும் ,அதற்குள் காடன் குச்சால் அடித்தபடி வேகமாக ஓட்டுவான் . 
ஒரு வழியாக ஊரை தாண்டுவதற்குள் உலகத்தை நடந்தே சுற்றிவந்த அலுப்பு ஏற்பட்டு விடும் .  
காளை ,   ஒரு பசு கன்றின்மீது கால்களை தூக்கிக்கொண்டு அதை துரத்தியது ,
அதை பார்த்த காடன் இவனுக்கு மதம் தலைக்கேறிவிட்டது என முணுமுணுத்துக்கொண்டே விரட்டினான் . 
காடுகளுக்கு வந்த உடனே மாடுகள் தனித்தனியே பிரிந்து கொண்டிருந்தன .
கிசோ மட்டும் இவனுக்கு அருகிலேயே சாலையில் கிடந்த புற்களை வருடிக்கொண்டிருந்தது . 
அவ் ,அவ் என செல்லமாக மாடுகளை வார்த்தையால் தடவிக்கொண்டிருந்தான் . 
பையில் வைத்திருந்த வெற்றிலை டப்பாவை எடுத்து ,உள்ளே இருந்து ஒரு வெற்றிலையையும் கொஞ்சம் சுண்ணாம்பையும் எடுத்து ,
வெற்றிலையில் சுண்ணாம்பை தடவி நாலாக மடித்து வாயில் திணித்துக்கொண்டான் . 
சூரியன் உச்சிக்கு வந்துவிட்டதால் நிழலுக்கு ஒரு மரத்தை தேடினான் . 
அந்த காடுகள் முந்திரி மரங்களால் பின்னப்பட்டவை ,அங்கு அதை தவிர வேறெந்த மரங்களும் பெரிதாக இல்லை. 
இலையுதிர்காலம் என்பதால் இலைகளே கிராமத்து பண்ணை வீடுகள் போல அங்கொன்றும் ,இங்கொன்றுமாக இருந்தன. 
அதற்குள் மாடுகள் முந்திரி மரங்களின் ஊடே இவன் பார்வையை விட்டு விலகிசென்றிருந்தன . 
மாடுகளை பின் தொடர்ந்து சென்றான் .எப்போதும் கிசோதான் இவனுக்கு வழிகாட்டி . 
எல்லா மாடுகளும் சென்றபோதும் கூட கிசோ இவனுக்கு பக்கத்திலேதான் இருந்தது . 
கிசோவை பின்தொடர்ந்தால்  மற்ற மாடுகளை கண்டுபிடித்து விடலாம் என கிசோவை பின் தொடர்ந்தான் . 
ஒரு முந்திரி மரத்தின் வாசலில் புகுந்த [போது உள்ளிருந்து காட்டுமுயல் ஒன்று இவன் கண்விழிக்குள் குதித்து ஓடிக்கொண்டிருந்தது . 
நாட்டுக்கோழி பிடிக்கும்தான் ஆனால் முயல் கிடைக்கும்போது நாட்டுக்கோழி உள்நாட்டு உணவாகிவிடும் . 
கையில் இருந்த கம்போடு முயலை துரத்தினான் . அதுஓடும் வேகத்திற்கு இணையாக இவனும் ஓடிக்கொண்டிருந்தான் . 
துரத்தலின் போது முயல் மரத்தை பிளந்துகொண்டு ஓடும் ,காடன் மரத்தை சுற்றிக்கொண்டு ஓடுவான் . 
கிட்டத்தட்ட நெருங்கிவிட்டான் முன்னே இருக்கும் முந்திரி மரத்தில் நுழைந்து கொண்டிருந்தது முயல் . 
மரத்தின் அருகே போனபோது எந்த சத்தமும் இல்லை .முயல் மரத்தைவிட்டு வெளியில் போகவில்லை என்பது இவனுக்கு தெரியும் . 
யோசித்துக்கொண்டே பார்வையை உள்ளே திருப்பினான் .
 எட்டு அடி நீளத்தில் மலைப்பாம்பு ஒன்று முயலை அதன் வாய்க்குள் தள்ளிக்கொண்டிருந்தது . 
கருத்த மேனியுடன் ,தோலின் அரை அடி இடைவெளியில் தலையில் இருந்து வால் வரை கரும்புள்ளிகளை 
கொண்டு அருவெறுப்பான தோற்றத்துடன் முயலின் வடிவத்தை மாற்றிக்கொண்டிருந்தது .
 காடனுக்கு மனதில் குமட்டல் புறப்பட்டு வாய்க்கு வருவதற்குள் அந்த இடத்தைவிட்டு புறப்பட நினைத்தபோது  
அங்கே ஒத்தையடி பாதைகள் தென்பட்டன . அந்த பாதை காடன் வந்த பாதையல்ல  . 
அந்த பாதை வடக்கே நீண்டிருந்தது பாதையின் முடிவில் முள்வேலியால் அடைக்கப்பட்ட ஒரு நிலமும் ,அதில் ஒரு கேணியும் ,
கேணிக்கு  அருகில் இருந்த மணல் மேட்டிலிருந்து புகை மேகத்தைபோல பறந்துகொண்டிருந்தன . 
காடனுக்கு ஆச்சிரியமாக இருந்தது .எத்தனையோ முறை இந்த காடுகளுக்குள் இவன் மாடு மேய்க்க வந்திருந்தாலும் ,
இந்த விசித்திரமான புகை காடனுக்கு அதை காணவேண்டும் என்ற ஆவலை தந்துகொண்டிருந்தது . 
மெல்ல அந்த முள் வேலிகளின் பக்கத்தில் சென்றான் . 
காடன் சட்டை முழுவதும் முயலை துரத்தியதால் நனைந்திருந்தது,  ஒரு குழாய் இருந்தால் மரங்களுக்கு நீர் பாய்ச்சிவிடலாம் ,அந்த அளவிற்கு வியர்வை வழிந்துகொண்டிருந்தது .  
வெயிலின் தாக்கத்தால் மரங்கள் தாகமுற்றிருந்தது தெரிந்தது . 
காடு முழுவதும் வெக்கை . காற்றின் வருகைக்கு காத்திருந்தான் காடன் . அதே சமயம் உள்ளிருந்த புகை குறைந்துகொண்டிருந்தது . 
வேலிக்கு அருகில் இருந்த மரத்தை பிடித்து காடன் உள்ளே குதித்தான். 
வேலம் பட்டை வாசனை காடனுக்கு நன்றாகவே தெரியும் ,மெல்ல நகர்ந்தபடி அருகில் சென்றான் , அடுக்கி  வைக்கப்பட்ட பானைகளும் , பார்லர்களும் ,வேலம் பட்டைகளும், விறகுத்துண்டுகளும் இவனுக்கு காட்சி அளித்தன . காட்சியின் முடிவில் அங்கே சாராயம் காய்ச்சுவதை அறிந்தான் .மனித கழுகுகள் நிறைந்த இடமாக தென்பட்டது அந்த இடம் . காய்ச்சுவது யாரென்று பார்க்க தலையை தூக்கினான் . 
ஊரின் ஒரு முக்கியபுள்ளி . அவர் இவனுக்கு பெரிய ஆள் . ஆனால் இவனை அவர் கண்ணால் கூட பார்த்தது கிடையாது என்பது காடனுக்கு தெரியும் .
மனதில் வலுவை வரவைத்துக்கொண்டு அருகே சென்றான் . இவன் வருவதை பார்த்த மனிதகழுகுகள் ஆயுதங்களை கையில் எடுத்தன . அதை பார்த்தும் முகத்தில் எந்த சலம்பாலும் இல்லாமல் அருகில் நின்றான் காடன் . 
அண்ணே கொஞ்சம் சாராயம் வேணும் என கேட்டான் . கழுகுகள் வேலையை பார்க்க தொடங்கின . இவனை உற்றுபார்த்த அந்த ஊரின் பெரும்புள்ளி ,ஒரு பிளாஸ்டிக் குடுவையில் சாராயத்தை ஊற்றி கொடுத்தார் . இரண்டு மிடர்ரில் மடக் ,மடக் என குடித்து முடித்தான் . மெல்ல பேச்சை ஆரமித்தார் ஊரின் பெரும்புள்ளி ஆருடா நீ ? எந்த ஊர் ? என தொடர்ந்து இரண்டு கேள்விகளை அடிக்கிக்கொண்டே நிரம்பி வழிந்த பானையை மாற்றினார் . நான்கு ஊர்களுக்கு பொதுவான காடு என்பதால் எந்த ஊரை சொல்லலாம் என யோசித்துக்கொண்டிருந்தான் . அப்போது மனிதக்கழுக்குகள் நிரம்பிய பனையை எடுத்துக்கொண்டு ஊரில் விற்பதற்கு புறப்பட்டன . 
ஸ்டேசனுக்கு பின்னால மாட்டுக்கறி போடுற கொட்டாய் இருக்கு இன்னைக்கி கடைய அங்க போடுங்க , பக்கத்து ஊர் கலவரத்துனால ஸ்டேசனுக்கு கூட்டம் வரும் , என சொல்லி அனுப்பினார் அந்த ஊரின் பெரும்புள்ளி 
.  காடனுக்கு போதை ஓரளவிற்கு இருந்தது .  இன்னும் கொஞ்சம் சாராயம்  கேட்டு குடுவையை நீட்டினான் . 
காசு இருக்கா என கேட்டார் பெரும்புள்ளி . இல்லை , கறவை மாடு ஒண்ணு இருக்கு என போதையில் விடை சொன்னான் . 



Monday, May 5, 2014

மழை தரும் சுகம்

10:07 AM 5/5/2014



மழை தரும் சுகம் 

 நேற்றிலிருந்து ஆட்டம் காட்டிய வானம் ஒரு வழியாக இன்று என் ஊரில் தரை இறங்கியது . .
விடிந்தும் விடியாத காலை ,சேவல் தன் அலாரத்தை எழுப்ப ஊர் மக்கள் தன் பணிகளை செய்ய ஆயத்தம் ஆனார்கள் . 
இரவு முழுவதும் எங்கள் ஊரை முற்றுகையிட்டு ,சூழ்ந்திருந்த  மேகம் விடி காலைதான் தோதான நேரம் என நினைத்து 
லேசாக மழை துளிகளை விசிறிவிட்டது .
 மொட்டை மாடியில் சிமெண்ட் ஓடுகளின் தாழ்வில் உறங்கிக்கொண்டிருந்த நான் மழையின் வாசம் முகர்ந்து விழித்துக்கொண்டேன் .
 கண்களை துடைத்துக்கொண்டு மழையை ரசிக்க அமர்ந்தேன் . 
மழை என்றால் எப்படிப்பட்ட மழை , மயக்கம் என்ன படத்தின் ஆரம்ப காட்சியில் தோன்றும் இடி ,மின்னல் இல்லாத அமைதியான மழை .
 தண்ணீர் குழாய்களில் இருந்த குடங்களிலும்,குண்டாண்களிலும் மழை நீர் பட்டு ,இசை எழுந்து கொண்டிருந்தது . 
ஊரில் இருந்து மழையை ரசித்து எவ்வளவு நாட்கள் ஆகிவிட்டன . 
மழையோ திருமண தம்பதியின் முதலிரவு போல மென்மையாக பெய்துகொண்டிருந்தது .
 அக்கினி வெயிலில்  தவித்துக்கொண்டிருந்த தரைகள் மழை அவ்வளவு பெய்தும் ஈரமே இல்லை.
 திடீரென மழை கொட்டத்துவங்கியது. அரை மில்லிமீட்டர் இடைவெளியில் மழைத்துளிகள் ஒன்றன் பின் ஒன்றாக பூமியில் விழுந்திக்கொண்டிருந்தன . 
நான் என்ன நினைத்தேனோ தெரியவில்லை ,திடீரென மழையோடு மழையாக நனைந்துகொண்டிருந்தேன் . 
அந்த நிமிடங்கள் பள்ளிக்கூடத்தில்  விடுமுறைக்காக பெருமழையை எதிர்பார்த்து  ஏமாந்த சோகம் அப்போது மறைந்திருந்தது .
 சண்டைக்கார மொட்டை மாடி என்றெல்லாம் பார்க்கவில்லை ,மழை என்றவுடன் அம்மாவின் கைபிடியை விட்டோடும் குழந்தையை போல 
அடுத்தவீட்டின் மொட்டை மாடியில் எகிறிவிட்டேன் . 
அந்த ஆனந்த சுகம் இரவில் தெரியும் விண்மீன்கள் அதே அளவில் நம் மீது விழுந்தால் எப்படி இருக்குமோ அப்படி . 
என்னோடு சேர்ந்து மழையில் நனைந்திருந்த தென்னையின் அடியில் போய் நின்றபோது ,
பனிசரிவில் வழுக்கி விளையாடும் விளையாட்டைபோல மழை நீர் 
தென்னை இலையின் வழியே சரிந்து என் மீது குவீயலாக விழுந்தன ,அது யாராலும் தயாரிக்க முடியாத ஷவர்.  
அப்படியே கையை உயரே தூக்கி முகத்தை வானுக்கு நேராக காட்டியபோது 
மேகத்தால் வேயப்பட்ட கூரையிலிருந்து திரவ கற்கண்டுகள் தலையிலும்,முகத்திலும்,உடலிலும் ,உருண்டும் ,சரிந்தும் ,ஊர்ந்தும் 
சொல்லக்கூடாத இடங்களில் நுழைந்தும் ,கால்களில் சரிந்தும் தரையில் விழுந்தபோது ,
இவ்வுலகின் மிகச்சிறந்த அழகியால் மசாஜ் செய்யப்பட்டது போல சுகம் சுகம் கண்டது மேனி 
அந்த நேரத்தில் தான் மழை கவிதைக்கொண்டு வருது யாரும் கதவடைக்க வேண்டாம் ,ஒரு கருப்பு கொடி காட்டியாரும் குடை பிடிக்க வேண்டாம் என்ற பாடலின் ஆழமான அரத்தம் விளங்கியது . பேரிரைச்சலோடு கொட்டிக்கொண்டிருந்த மழையால் அந்த மொட்டைமாடி குலமாகிபோனது . ஆழம் கணுக்காலுக்கும் கீழே இருந்தது ,அதில் படுத்து குளிக்க மனது ஆசைப்பட்டாலும் ,ஆழம் இல்லை என்பதை மூளை உணர்த்தியபோது கொஞ்சம்  ஏமாற்றமாக இருந்தது . 
சாலைகளில் நீர் வீட்டை விட்டு ஓடும் காதலன் ,காதலியை போல வாசலில் கிடந்த காலனியை இழுத்துக்கொண்டு சென்றது .
ஒரு காதலியுடன் நணைந்திருந்தால் இன்னும் சுகமாகவும் இருந்திருக்கும் ,இதை விட அழகாகவும் வர்ணித்தும் இருக்கலாம் 

.